பூப்பெய்த மகளின் கடிதம்

 

பாலையில் வந்திறங்குகிறது
வெட்கம் தோய்ந்த
வார்த்தைகளை சுமக்கும் கடிதம்.

மணல்காற்றில் நிலைகுலையும்
ஒட்டகத்தின்
மூச்சித்திணறல் எனக்குள்.

வாழைமரத்து விழுதுகளில்
பூப்பெய்துகின்றன
வெட்கமும்
பரிமாறதடுமாறும் வார்த்தைகளும்.

தயக்கத்தின் காட்டாறு
எனக்கேயெனக்கான
உன் கன்னங்களை

உன் உதடுகளை

உன் மூக்கு காதுகளை

உன் விருப்பதிற்கு
வளையாத தலைமுடியை

படுக்கைகளை ஈரமாக்கும்
உன் இரவுகளை கலைத்துவிடாமல்
உடைமாற்றி விடுவதை

என் மூச்சை சுவாசித்தபடி
பூனைக்குட்டியாய்
என் மடியில் படுத்துறங்கும்
உன் லாவகத்தை

இடம் பெயர்க்குகிறது
என்னிலிருந்து.

பாலையின் அடியில் புதையும்
தீ பிழம்பில்

எனக்கான கருணையை

எனக்கான நம்பிக்கைகளை

எனக்கான ரகசிய திறவுகோலை

எனக்கான பிரமிடுகளை

எனக்கான தின்பண்டங்களை

எரித்துகொண்டிருக்கிறாய்.

என் மனச்சித்திரத்திலிருந்து
உதிர்ந்தபடியிருக்கிறது
உன் வண்ணத்தின் மணல்கள்.

மணலற்ற பாலையை கைகாட்டுகிறாய்.

இளமையின் தீப்பந்தகானல்
தலைவிரித்தாடுகிறது
அருவெறுப்புடன் அணுகுகின்றன
கானல் பருகும் ஒட்டகங்கள்.

பேராசையில் நான் கோரி குடிக்கும்
உன் அன்பை
சிதைத்தபடி சிதறிக்கிடக்கின்றன
வெட்கம் தோய்ந்த
உன் கடிதத்தின் வரிகள்.

என் வருகையை
உன் புதிய விளையாட்டுக்கான
பொம்மையைபோலவே
எதிர்கொள்ளும் அவநம்பிக்கையின்
ஓவியங்களை
நானே களைந்தெறிகிறேன்.

எனக்கே எனக்கான
கடவுளை
மணற்சரிவில் தவறவிடுகிறேன்.

பொம்மையில்லையென்பதற்காக
பூப்பெய்திய பொம்மை நீ.

மனவெளியில்
நீ சுழன்றுகொண்டிருக்கிறாய்
ஒரு பிளாஸ்டிக் பம்பரமாய்.

பெரியார் சிலைகளை கடலில் கரைக்கவேண்டும்

தெருவுக்கு தெரு சாலை சந்திப்புகளிலிருக்கிற அனைத்து
 பெரியார்
சிலைகளையும் கடலில் கரைத்துவிடுவதென்ற 
முடிவிலிருக்கிறேன்.
சொந்த செலவில்தான். குஷ்பூவுக்கு கோயில் 
கட்டிய இடம் காலியாக
இருப்பதாக அறிந்து அதில் பெரியாருக்கு கோயில்கட்ட
 முயன்றபோது
நண்பர்கள் குண்டுகட்டாக தடுத்துவிட்டார்கள்.
 இம்முயற்சியை நண்பர்கள் தடுக்க
மாட்டார்களென்ற அற்புத நம்பிக்கையிருக்கிறது.
 குறைந்தது இரண்டுமூன்று
நண்பர்களாவது பெரியார் சிலையுடன் கலந்து 
கொள்வார்களென்ற நம்பிக்கையுண்டு.
நாகர்கோயில் பார்க் முன்பிருந்து ஊர்வலமாக 
கிளம்பி செட்டிக்குளம் பறக்கை சந்திப்பு
வழியாக சங்குதுறை பீச்சில் பெரியார் சிலைகளை
 கரைப்பதென்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.
 கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் அவரவர் சிலையுடன்
வரவும். மறைமுக கட்டணம் இல்லை. 
கன்னியாகுமரியில் பெரியார் சிலைகளை
கரைக்க அனுமதி கிடைப்பது சிரமமென்பதால் 
சங்குதுறை பீச்சில் இம்முறை கரைக்கலாம். 
போனமுறை ஊர்வலத்தில் நடனமாடி
 வாந்தியெடுக்காதவர்களுக்கு
இம்முறை அனுமதி மறுக்கப்படுகிறது.
 ஒன்றுக்குமேற்பட்ட சிலைகளுடன் வரும்
குழுக்களுக்கு அனுமதியில்லை. எலுமிச்சை
 மஞ்சள்பொடி காவிகொடி உருட்டுகட்டை
வழங்கப்படும். பெட்ரோல் உங்கள் பொறுப்பு.
 கரையாத சிலைகளுக்கு நிர்வாகம்
பொறுப்பல்ல.

காதறுந்த ஊசி

நேற்று பெய்தது பாலைவனத்து மழை

விரட்டி சேகரிக்கிறது

என் பால்யம்

 

சிரட்டையில் நிரம்புகிறது

மழை

ஏக்கத்தில் ததும்பும் துளிகளாய்

 

நீ கொண்டுதந்த ஈரத்தில்

வெக்கையின் உதிர்ந்த சிறகுகள்

 

பூப்பெய்திய பெண்ணின்

தொடக்க பருவத்திலிருக்கிறது பாலை

 

நான் புரண்ட

மணல்வெளிகளில்

ஈரம் தருவித்த பெண்ணின் வாசம்

 

வந்துபோன தடங்களற்ற

பாலைமழையை

கொண்டாட

நீ அனுப்பி தந்த

பைரிகள்

உச்சந்தலையை கொத்துகின்றன

 

தப்பித்தோடும் மணல்வெளியில்

தனிமையின் கதவுகளை

என் மரணத்தின் முன் தட்டுவேன்

 

அது தன் முகங்களை

பெயர்த்துகொண்டிருக்கையில்

திரும்பத்தரும் முத்தங்களின்

எண்ணிக்கையை நீ

தவறவிடுகிறாய்

 

வஞ்சித்த உறைவிடத்தில்

பூத்திருக்கின்றன

பாலைமலர்கள்

சிரட்டையில் நான் சேகரித்த

மழையை பார்க்க

 

துயரத்தால் வீசியெறிந்த வெட்கத்தை

மறுபடியும் தூவிபோகிறது

மழை

 

மறப்பதற்காக கொண்டலையும்

தூரதேச ஞாபகங்களை

தன் துளிகளால்

கொத்தியெறிகிறது

 

மணல்சூட்டில் பொள்ளும் பாதங்களை

இதமாக்குகிறது

 

தண்ணீரால் அபிசேகம் செய்யப்பட்ட

கானான் தேசம்

சூட்டில் விழுந்த முதல் துளிபோல

ஆவியாகிகொண்டிருக்கிறது

 

என் தனிமையின் கதவுகளை

திறக்கும்

கனிந்த பெண்களிடம்

காணிக்கையாக்க

என்னிடமிருப்பதெல்லாம்

காதறுந்த ஊசியும்

ஒரு சிரட்டை மழையும்.

  • 'நவ்வல்' சிறுகதை தொகுப்பு-1994

    லில்லிதெய்வசிகாமணி இலக்கிய விருது
    திருப்பூர் தமிழ் சங்கவிருது

  • குருசு.சாக்ரடீஸ்

    எழுத்தும் வாழ்க்கையும் இருவேறு பாலைகள். எந்த பாலையை கடப்பதென்ற குழப்பத்தில் உருகிய இளமையை மைகூட்டில் சேகரித்தபடி என் பயண ஒட்டகங்களை தேடியபடி…..